“அற்புதமான முன்மாதிரி” - சுரங்க மீட்பு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

“அற்புதமான முன்மாதிரி” - சுரங்க மீட்பு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது: “உத்தரகாசியில் சிக்கியிருந்த நமது தொழிலாளர் சகோதரர்கள் மீட்கப்பட்டது நம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

சுரங்கத்தில் சிக்கியிருந்த நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: உங்களுடைய துணிச்சலும், அமைதியும் அனைவருக்கும் ஊக்கமாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் நலமும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க நான் வாழ்த்துகிறேன்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நமது நண்பர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் அவர்களின் குடும்பங்கள் காட்டிய பொறுமையையும் தைரியத்தையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இந்த மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களின் நம்பிக்கைக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களது துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஒரு அற்புதமான முன்மாதிரியை அமைத்துள்ளனர்” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in