Published : 17 Nov 2023 11:01 AM
Last Updated : 17 Nov 2023 11:01 AM

ஹரியாணா | பூஜைக்கு சென்ற பெண்கள் மீது கல்வீச்சு: நூ நகரில் புதிய பதற்றம்

பிரதிநிதித்துவப்படம்

சண்டீகர்: ஹரியாணா மாநிலம் நூவில் மசூதி ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத சிறுவர்கள் சிலர் பூஜைக்குச் சென்ற பெண்கள் மீது கற்கள் வீசியதால் அங்கு புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நூ மாட்டத்தில் வியாழக்கிழமை பூஜைக்குச் சென்ற பெண்கள் சிலர் மீது அங்குள்ள மசூதியில் இருந்து சிறுவர்கள் சிலர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கல்வீச்சில் பெண்கள் காயமடைந்தனர். இந்த கல்வீச்சு சம்பவத்தினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இரண்டு பிரிவினைச் சேர்ந்த பெண்களும் கூடினர். இதனால் அங்கு புதிய பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நூ எஸ்.பி. போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களைச் சமாதானப்படுத்தினார். மேலும் அந்த மசூதி மவுலானாவிடம் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து நூ காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர பிஜர்னியா கூறுகையில், "போலீஸாருக்கு சில வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் சிறுவர்கள் சிலர் பூஜைக்கு செல்லும் பெண்கள் மீது கற்கள் வீசுகின்றனர். சம்பவம் நடந்த மசூதியில் சில கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றது. இச் சம்பவம் வியாழக்கிழமை இரவு 8.20 மணிக்கு நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வீடியோவில் உள்ள சிறுவர்களிடம் விசாரிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டிய நூ பகுதியில் கடந்த ஜூலை 31ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து நூவின் எஸ்.பி.யாக இருந்த வருண் சிங்லா மாற்றப்பட்டு, நரேந்திர பிஜர்னியா நூவின் எஸ்.பி.யாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x