Published : 09 Nov 2023 06:31 PM
Last Updated : 09 Nov 2023 06:31 PM

மஹுவா மொய்த்ராவை எம்.பி பதவியில் இருந்து நீக்க மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை

மஹுவா மொய்த்ரா | கோப்புப் படம்

புதுடெல்லி: பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை இன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 6-4 என்ற கணக்கில் பரிந்துரை நிறைவேறியது. காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தார். மற்ற நான்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் மறுப்புக் குறிப்புகளை சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கை குறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமாா் சோன்கா், “தர்ஷன் ஹிரானந்தானியின் பிரமாணப் பத்திரம், நிஷிகாந்த் துபேவின் புகார் மற்றும் மஹுவா மொய்த்ரா அளித்த வாக்குமூலம் என அனைத்து ஆதாரங்களையும் நெறிமுறைக் குழு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்று தெரிவித்தார். மேலும், மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி லஞ்சம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை வெளிக்கொணர வேண்டும் என்றும் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

பின்புலம் என்ன? - திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடா்பாக விசாரணை நடத்த பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறை குழுவுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் மக்களவை நெறிமுறைகள் குழு முன்பாக ஆஜராகி, மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்தனர். அதன்பின், இந்தக் குழு விசாரணையில் பங்கேற்ற மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரிகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம்சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே, மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாற்றிய மஹுவா மொய்த்ரா, “ரூ.13,000 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஊழல் தொடர்பாக அதானியிடம் முதலில் சிபிஐ விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யட்டும். பிறகு இங்கு வந்து எனது காலணிகளை அவர்கள் எண்ணலாம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x