தமிழகத்தில் என்ஐஏ சோதனை - வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது

தமிழகத்தில் என்ஐஏ சோதனை - வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் சோதனை நடத்தி வரும் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ), செங்கல்பட்டு அருகே இருவரை கைது செய்துள்ளது.

திரிபுரா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பதுங்கி இருக்கும் நபர்களைத் தேடும் பணியில் என்ஐஏ ஈடுபட்டுள்ளது. மாநில காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ள என்ஐஏ, சுமார் 50 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகிறது.

செங்கல்பட்டு அருகே நடத்தப்பட்ட சோதனையில், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் பிடிபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் பெயர் ஷாஹித் ஹூசைன் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள், போலியான ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் பெங்களூருவில் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்துள்ளது. தினகரன் எனும் அய்யா, காசி விஸ்வநாதன், ரசூல், சதாம் ஹூசேன், அப்துல் முஹீது ஆகிய 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in