Published : 29 Oct 2023 12:16 PM
Last Updated : 29 Oct 2023 12:16 PM

''அமலாக்கத்துறையைக் கொண்டு அச்சுறுத்தும் குற்றத்தை மோடி அரசு செய்கிறது'': அசோக் கெலாட்

அசோக் கெலாட் | கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் அமலாக்கத்துறை திடீரென சோதனை நடத்துவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், அவர்கள் தவறு செய்கிறார்கள், நாடு அவர்களை மன்னிக்காது என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சனிக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தேசிய ஜனநாயக கூட்டணி தவறு செய்கின்றது. நாடு அவர்களை மன்னிக்காது. தேர்தல் தொடங்கி விட்டது, இந்த நேரத்தில் அமலாக்கத்துறையினர் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். நாள் முழுவதும் அவர்களை நகரவிடாமல் செய்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் நிலையில் பாஜகவினர் சுதந்திரமாக பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.

நடைபெற இருக்கிற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தாலும் ஆச்சரியம் இல்லை. அமலாக்கத்துறை ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். அங்கு என்னனென்ன கண்டுபிடிக்கப்பட்டன என்பதை இதுவரைத் தெரிவிக்கவில்லை. அமலாக்கத்துறையின் செய்தித்தொடர்பாளர்களாக பாஜக மட்டுமே பேசிக் கொண்டு இருக்கின்றது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறையினர், தேர்வுத்தாள் வெளியான வழக்கில் பணமோசடி தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், மஹுயா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கோவிந்த் சிங் தோடஸ்ராவுக்குச் சொந்தமான சிகார் மற்றும் ஜெய்பூரில் உள்ள இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல், அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பாஜகவினர் கெலாட் தேர்தலில் போட்டியிடுவதை கெடுக்க விரும்புகிறார்கள். காங்கிரஸ் தலைவரை மனச்சோர்வடையச் செய்து பயமுறுத்த நினைக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இதையேச் செய்கிறார்கள். நாங்கள் பயமப்பட மாட்டோம். நாங்கள் வலிமையுடன் போராடி இதனை எதிர்கொள்ளுவோம். அவர்கள் இப்போது செய்வது சரியில்லை. நாங்கள் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் நடந்ததே இல்லை. ஆனால் இன்று முதல்வரை பயமுறுத்த இவ்வாறு செய்கிறார்கள். ஆனால், ஒரு நாள் அவர்களும் துன்பப்பட வேண்டியது இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட், "இந்த மாதிரியான தந்திரங்களைப் பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர்களை பாஜக பயமுறுத்திவிட முடியாது. மாநில காங்கிரஸின் அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் ஒற்றுமையுடன் ஒன்றாக இருப்போம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டு வர மக்கள் முடிவு செய்திருப்பதால் இதுபோன்ற செயல்களின் மூலம் பாஜகவின் பதற்றம் வெளிப்படையாக தெரிகிறது" என்று தெரிவித்திருந்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 27-ம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடக்க இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x