Published : 06 Oct 2023 01:12 PM
Last Updated : 06 Oct 2023 01:12 PM

நியூஸ்கிளிக் விவகாரம் | பிரபிர் புர்கயஸ்தா, அமித் சக்ரவர்த்தி கைதுக்கு எதிரான மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுவினை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்தார்.

அப்போது அமர்வு முன் கபில் சிபல், "இது நியூஸ்கிளிக் விவகாரம். கைது நடவடிக்கை சட்டவிரோதமாகவும் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராகவும் நடந்துள்ளது. இந்த மனுவினை அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார். அதற்கு உயர் நீதிமன்ற அமர்வு இசைவு தெரிவித்தது.

வழக்கின் பின்னணி: நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லி சிறப்பு பிரிவால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் அலுவலகம் போலீஸாரால் சீல் வைக்கப்பட்டது.

சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை பரப்புவதற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் நியூஸ் கிளிக்கில் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி காவல் துறை மனு தாக்கல் செய்த நிலையில், அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதனிடையே, வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தின் 2016-ம் ஆண்டு உத்தரவு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் 2010-ம் ஆண்டு உத்தரிவினை மேற்கோள் காட்டி கைது செய்யப்பட்ட இருவருக்கும் முதல் தகவல் அறிக்கையின் நகலை வழங்குமாறு டெல்லி போலீஸாருக்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x