வீடியோவால் சர்ச்சை: அமைச்சர் ரோஜா கண்ணீர் - முன்னாள் அமைச்சர் கைது

வீடியோவால் சர்ச்சை: அமைச்சர் ரோஜா கண்ணீர் - முன்னாள் அமைச்சர் கைது
Updated on
1 min read

திருப்பதி: ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, திருப்பதியில் நேற்று கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் நிர்வாண படத்தில் நடித்ததாகக் கூறி, சித்ரவதை செய்கின்றனர். சட்டப்பேரவையிலும் சி.டி.க்கள் காட்டப்பட்டன. ஆனால், அதில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது.

எனது புகழ், முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வாய்க்கு வந்தபடி முன்னாள்அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியிருக்கிறார். அவரை யாரும் கண்டிக்காதது ஏன்? ஆனால், சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பேசி, அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி நினைத்தால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு ரோஜா கூறினார்.

இதற்கிடையில், அமைச்சர் ரோஜா குறித்த சர்ச்சை பேச்சுக்கு, மகளிர் ஆணையம் சார்பில் ஆந்திர மாநில டிஜிபி-க்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில், முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி மீது போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in