ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ அறிவிப்பு

ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் 3-வது முறை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ஆதித்யா-எல் 1 எனும் நவீன விண்கலம், கடந்த செப்.2-ம் தேதி பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

குறைந்தபட்சம் 235 கி.மீ. அதிகபட்சம் 19,500 கி.மீ. தூரம் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரத்தை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் தற்போது 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதித்யா விண்கலம் பூமிக்கு அருகே வரும்போது, அதில் உள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு சுற்றுப் பாதை உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை ஏற்கெனவே 2 முறை மாற்றப்பட்டது. தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 9-ம் தேதி நள்ளிரவு விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது.

இதன்மூலம், குறைந்தபட்சம் 296 கி.மீ. அதிகபட்சம் 71,767 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. இதுபோல இன்னும் 2 முறை சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்படும். பின்னர், ஆதித்யாவின் பயணப் பாதை செப்.15-ம் தேதி மாற்றி அமைக்கப்படும். அதன்பிறகு, புவிவட்டப் பாதையில் இருந்து விலகி, சூரியனை நோக்கி விண்கலம் பயணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் புறப்பட்ட ஆதித்யா விண்கலம், சுமார் 4 மாத பயணத்துக்கு பிறகு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in