Published : 22 Aug 2023 06:40 AM
Last Updated : 22 Aug 2023 06:40 AM

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1

கோப்புப்படம்

பா.ஸ்ரீ குமார், அறிவியல் பலகை, சென்னை

சூரியன், நமக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரிய குடும்பத்தில் மிகப்பெரியது. இதன் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. சூரியனில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் எரிந்து தொடர்ந்து வினைபுரிந்து கொண்டே இருக்கின்றன.

சூரியன்,பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய ஒளி பூமியை வந்தடைய 8நிமிடங்கள் ஆகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் சக்தி தரக்கூடிய மிகப் பெரிய ஆற்றல் கொண்டது சூரியன். சூரியனின் ஆற்றல் இல்லாமல் பூமியில் உயிர்கள் வாழ்வது கடினம்.

சூரியனின் மைய வெப்பம்15மில்லியன் டிகிரி செல்சியஸ். இந்த உயர் வெப்ப நிலையில் அணு பிணைவு நடைபெற்றுக் கொண்டே இருப்பதால் இது சூரியனை உயிர்ப்புடன் வைத்துள்ளது. சூரியனின் மேற்பரப்பின் வெப்பம்5500 டிகிரி செல்சியஸ்(40 டிகிரி செல்சியஸுக்கே நம் உடல் வியர்த்துக் கொட்டுகிறது).

சூரியனில் நிகழும் சூரிய வெடிப்பின் தாக்கம் செயற்கைக்கோள்களிலும், விண்வெளி செலுத்து வாகனங்களிலும் அதன் தகவல் தொடர்பிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். ஒரு வேளை விண்ணில் இருக்கக்கூடிய விண்வெளி வீரர்கள் நேரடியாக சூரிய வெடிப்பின் தாக்கத்தால் உயிரிழப்பை சந்திக்க நேரிடலாம். எனவே இத்தகைய தாக்கங்களை முன்கூட்டியே அறிந்து அதற்கான செயல்களில் இறங்குவது சரியான அணுகுமுறையாக இருக்கும்.

ஏன் ஆய்வு செய்ய வேண்டும்?

நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம் (15கோடி கி.மீ.) என்பதால் மற்ற நட்சத்திரங்களை ஆய்வு செய்வதைவிட சூரியனை ஆய்வு செய்வது அவசியமாகிறது. இதன் மூலம் நம்முடைய பால்வெளி மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். மேலும், வேறு சில நட்சத்திர திரள்களில் உள்ள நட்சத்திரங்களை நாம் தெரிந்து கொள்ள உதவும்.

சூரியனின் வெப்பம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதுகுறித்த ஆய்வுகளை ஒரு ஆய்வகத்தில் நிகழ்த்த முடியாது. எனவே சூரியனை ஒரு ஆய்வகமாக கொண்டு இந்த ஆய்வுகள் நேரடியாக செய்யப்பட உள்ளது.

ஆதித்யா எல்-1என்ற இந்த செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு ஆய்வகமாக செயல்படும். இந்த விண்கலமானது L-1 என்று அழைக்கக் கூடிய சூரியனின் ஒளிவட்டப் பாதையில் உள்ள லெக்ராஞ்சே-1, அதாவது சூரியன் -பூமி சுற்றுப்பாதையில் உள்ள பகுதியாகும்.

இந்த தொலைவில் ஆய்வகம் செயல்படும்போது அதிலிருந்து கிடைக்கும் பயன் அதிகமாகும். மேலும் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து சூரியனை கண்காணிக்கக் கூடிய சாதக அம்சம் உள்ளது. இது கிரகணங்கள் ஏற்படாத பகுதியாகும்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் லூயி லெக்ராஞ்சே என்ற கணிதம் மற்றும் வானியல் அறிஞர், பூமி, நிலவு, சூரியன் ஆகியவைகளின் ஈர்ப்பு விசையானது ஏதோ ஒரு புள்ளியில் சமநிலையில் இருக்கும் என்று கண்டறிந்தார். அவரது பெயரில் இந்த சுற்றுவட்டப் பாதை அழைக்கப்படுகிறது. இந்த பாதையில் நிலைநிறுத்தப்படும் பொருட்கள் சம ஈர்ப்புவிசையுடன் சுழன்று வரும், பூமிக்கு முன் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையை L1 என்றும், பூமிக்கு பின்னால் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையை L2 என்றும் அழைக்கின்றனர். இந்த L2-வில் தான் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டு சுற்றி வந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. L1, L2, L3, L4 மற்றும் L5 என மொத்தம் ஐந்து லாக்ரேஞ்ச் புள்ளிகள் உள்ளன.

சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி ஆய்வகமான (space-based Indian observatory) ஆதித்யா-எல்1-ஐ ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக் கோள் மையத்தில் (யு.ஆர்.எஸ்.சி.) உருவாக்கப்பட்ட செயற் கைக் கோள் ஹரிகோட்டாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மூலம் இந்த விண்வெளி ஆய்வகம் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. 4 மாத கால பயணத்துக்குப் பிறகு 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லெக்ராஞ்சே-1 சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா எல்-1 நிலைநிறுத் தப்படும்.

இந்த ஆய்வின் நோக்கம்: சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களை கண்டறிய முடியும். சூரிய வெடிப்பினால் ஏற்படும் சூரிய புயல் மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் மேலும் அதன் வெப்ப மாறுபாடு குறித்தும் கண்டறிய முடியும்.

ஒருவேளை சூரியனில் ஏற்படும் வெடிப்புகள் பூமியை நோக்கி வரும் பட்சத்தில் அது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் குறிப்பாக பூமியின் விண்வெளி வானிலையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் நாம் அறிய முடியும்.

சூரியனின் துருவப் பகுதிகள் இதுவரை நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. எனினும், எதிர்காலத்தில் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் ஒன்றிணைந்து சூரியனை முழுமையாக ஆய்வு செய்ய முன் வரலாம். அதற்கு ஒரு தொடக்க புள்ளியாக இஸ்ரோவின் இந்த திட்டம் நிச்சயமாக உதவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x