ஊழலை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

ஊழலை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜி20 அமைச்சர்கள் கூட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

பேராசை குறித்து ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகளையும், இந்தியஉபநிடதங்களையும் மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தன் உரையைத் தொடங்கினார்:

ஊழலால் தீவிரமாக பாதிக்கப்படுவது நாட்டின் ஏழைகளும் விளிம்புநிலை மக்களும்தான். நாட்டின் வளத்தை ஊழல் பாதிக்கிறது. சந்தையை சிதைக்கிறது. அரசின் சேவைகளை பாதிக்கிறது. அனைத்துக்கு மேலாக, ஊழலால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகிறது. நாட்டின் வளத்தை மக்களின் நலனுக்கான பயன்படுத்துவதே ஒரு அரசின் கடமை என்கிறது அர்த்தசாஸ்திரம். அந்த இலக்கை அடைய, ஊழலை ஒழிப்பது அவசியம்.

ஊழலுக்கு எதிராக இந்தியாமிகக் கடுமையான கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. ஊழலை ஒழிக்க தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் முயற்சியை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது.

மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அரசின் திட்டங்களில் இருக்கும் ஓட்டைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் நலஉதவிகள் நேரடியாக சென்றடைகின்றன.

கடந்த 9 ஆண்டுகளில் தொழில்சார்ந்த நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தரகர்களின் தலையீட்டை நீக்கும் வகையில்,அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அரசு கொள்முதலில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளோம்.

வெளிநாடுகளுக்குத் தப்பி யோடும் பொருளாதாரக் குற்ற வாளிகளை மீட்டு வருவது அனைத்து ஜி20 நாடுகளுக்கும் சவால் நிறைந்ததாக உள்ளது. 2014-ம் ஆண்டில் என்னுடைய முதல் ஜி 20 கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்துப் பேசினேன். 2018-ம் ஆண்டு கூட்டத்தில், இவ்விவகாரம் தொடர்பாக 9 திட்டங்களை முன்வைத்தேன்.

ஊழலை முற்றிலும் ஒழிக்க நாடுகளிடையிலான ஒத்துழைப்பு அவசியம். சட்ட நடவடிக்கை, தகவல் பறிமாற்றம், சொத்தை முடக்குதல் உள்ளிட்ட தளங்களில் நாடுகளிடையே புரிந்துணர்வு வேண்டும். இதற்கு ஜி20 நாடுகள் முன்னுதாரணமாக திகழ வேண்டும். நமது கூட்டு முயற்சி மூலம், ஊழலை வேறோடு ஒழிக்க முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in