ஹரியாணா கலவரத்தில் உயிர்தப்பிய பெண் நீதிபதி

ஹரியாணா கலவரத்தில் உயிர்தப்பிய பெண் நீதிபதி
Updated on
1 min read

புதுடெல்லி: ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத், ‘ஷோபா யாத்ரா’ எனும் ஆன்மீக ஊர்வலம் நடத்தியது. இதில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் மதக்கலவரமாக வெடித்தது. பொதுமக்கள் உயிர்பிழைக்க வேண்டி பல இடங்களில் தஞ்சமடைந்தனர். அவர்களில் நூ மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி அஞ்சலி ஜெயினும் அடங்குவார். இவர் தன் 3 வயது மகளுடன் கலவரக்காரர்களிடம் சிக்கியுள்ளார்.

இது குறித்து பெண் நீதிபதியுடன் சிக்கிய உதவியாளர் டேக்சந்த் கூறியதாவது:

சுமார் 150 பேர் கொண்ட ஒரு கும்பல் எங்களை சாலையில் சூழ்ந்தது. எங்கள் வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. காரிலிருந்து எங்களை இறங்கச் சொல்லிவிட்டு வாகனத்திற்கு அக்கும்பல் தீவைத்தது. இதனால், மிகவும் அச்சமுற்று நாங்கள் அங்கிருந்த அரசு போக்குவரத்து பணிமனையில் தஞ்சமடைந்து உயிர்தப்பினோம். உள்ளூரின் சில வழக்கறிஞர்களுக்கு போன்செய்து வரவழைத்து அவர்கள் உதவியால் வீடு வந்து சேர்ந்தோம். இவ்வாறு டேக்சந்த் தெரிவித்தார்.

கலவரம் பரவிய ஹரியாணாவின் நூ, பல்வல், குருகிராம், பரிதாபாத் உள்ளிட்ட கலவர பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்காக சில மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

உபியின் காஜியாபாத், நொய்டாவின் சில பகுதிகளில் இணையசேவைகள் ஆகஸ்ட் 5 வரை முடக்கப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படைகளின் ரோந்தும், காவலும் கலவரப் பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in