மாநகராட்சி அலுவலகத்தில் பாம்பை விட்டு ஆர்ப்பாட்டம்: ஹைதராபாத்தில் பரபரப்பு

மாநகராட்சி அலுவலகத்தில் பாம்பை விட்டு ஆர்ப்பாட்டம்: ஹைதராபாத்தில் பரபரப்பு

Published on

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கழிவுநீருடன் கலந்த மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் கொசுத்தொல்லை மற்றும் நோய்த் தொற்றுகளுக்கு ஆளாவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்றான ஆல்வால் பகுதியில் மழைநீரில் பாம்புகளும் அடித்து வருவதைக் கண்டு பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆல்வால், பாரதி நகரைச் சேர்ந்த அக்‌ஷயகுமார் என்பவர் நேற்று தனது வீட்டுக்குள் புகுந்த ஒரு பாம்பை பிடித்து தங்கள் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தார்.

அதிகாரிகள் அதிர்ச்சி: பிறகு அந்த பாம்பை மாநகராட்சி அதிகாரியின் மேஜை மீது விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டுவெளியேறினர்.

பிறகு மாநகராட்சி ஊழியர்கள் அக்‌ஷயகுமாரின் வீட்டுக்கு சென்று அப்பகுதியில் புதர்கள் இருப்பதை கண்டறிந்தனர். பிறகு அந்தப் புதர்களை வெட்டி அகற்றினர். அக்‌ஷயகுமாரின் நூதனப் போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in