

பாலசோர்: ஷாலிமரிலிருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கேரள பயணி கிரன் (36) அளித்த பேட்டியில் கூறியதாவது:
கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து 4 பேர், கொல்கத்தாவில் உள்ள ஒரு கோயிலில் தரை அமைக்கும் பணிக்காக சென்றிருந்தோம். சென்னை வந்து திருச்சூர் செல்வதற்காக நாங்கள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினோம். திடீரென பயங்கர சத்தம் கேட்டவுடன் எங்கள் பெட்டி இடதுபுறம் உள்ள தண்டவாளத்தில் மோதி இரண்டு முறை உருண்டது. இதில் பல பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். ரயில் மோதியதும், மின்சாரம் துண்டாகி ரயில் பெட்டிக்குள் இருள் சூழ்ந்தது. ரயில்பெட்டி தலைகீழாக கிடந்ததால், எங்களால் நிற்க முடியவில்லை. ஒருவர் மீது ஒருவர் ஏறி கதவு, ஜன்னல்கள் வழியாக வெளியேறினோம். எங்கள் பெட்டிக்கு வெளியே பல பெட்டிகள் உருக்குலைந்து கிடந்தன. இருள் சூழ்ந்த ரயில் பெட்டிக்குள் இருந்து பயணிகளின் அழுகுரல் சத்தம் மட்டுமே கேட்டது.
என்னுடன் பயணம் செய்த 4 பேரும் ரயில் பெட்டியில் இருந்து வெளியேறி உயிர் தப்பினோம். ரயிலில் தீ விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டதால், அருகில் உள்ள வயல் பகுதிக்கு சென்றோம். எங்களுடன் வந்த வைஷாக் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை கிடைப்பதற்காக, தொலைவில் விளக்கு எரிந்த பகுதியை நோக்கி சென்றோம். அப்பகுதி மக்கள் எங்களை வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு கிரன் தெரிவித்தார்.