

போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ரச்சனா குர்ஜார். பிரபல யூடியூபரான இவர், ஹோம்டூர் என்ற பெயரில் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்து அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். வீட்டின் ஒவ்வொரு அறை, அலமாரிகளில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை தனது வீடியோக்களில் காண்பித்தார்.
இந்த வீடியோக்களை பார்த்த மர்ம நபர்கள் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அவரின் வீட்டில் நுழைந்தனர். ரச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டினர். பின்னர் ஹோம் டூர் வீடியோக்களில் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் வீட்டில் இருந்த நகைகள், பணம், விலை உயர்ந்த பொருட்களை திருடர்கள் கொள்ளை அடித்து தப்பிச் சென்றனர்.
அதிகாலை 4 மணிக்கு கண் விழித்த ரச்சனா கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். செல்போன் வாயிலாக அருகில் உள்ள உறவினர்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து மீட்டனர்.
இதுகுறித்து ரச்சனா கூறும்போது, “எங்கள் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து உள்ளூர் போலீஸில் புகார் அளித்துள்ளோம்’’ என்றார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ரச்சனாவின் ஹோம் டூர் வீடியோக்களை பார்த்த திருடர்கள் நன்கு திட்டமிட்டு திருட்டை அரங்கேற்றி உள்ளனர். இதுபோன்ற வீடியோ வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது’’ என்றனர்.