

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் சாப்டூர் வனச்சரகம் மாவூத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குட்டம் பகுதியில் காட்டுத்தீப்பற்றியது நேற்று முன் தினம் இரவு தெரியவந்தது.
சிறிது நேரத்தில் வத்திரா யிருப்பு வனச்சரகம் ரத்தி னக்கல் பகுதியிலும் காட்டுத் தீப்பற்றியது. ஒரே நேரத்தில் இரு வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வனப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லை. இதன் காரணமாக நீரோடைகள் முற்றிலும் வறண்டு, வனப்பகுதி முழுவதும் காய்ந்துள்ளதால் காட்டுத்தீ அருகே உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், இரவில் காற்றின் வேகம் அதிகரிப்பதாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் கடும் சிரமம் நிலவுகிறது.
யானை, மான், சிறுத்தை, காட்டெருமை, சாம்பல் நிற அணில்கள், வரையாடு உள் ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த இப்பகுதியில் 2 நாட்களாக காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திரு விழா நடைபெற்று வருவதால் காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சதுரகிரி மலையேற இன்று அனுமதி இல்லை
காற்றின் வேகம் காரணமாக சதுரகிரி மலையின் கிழக்குப் பகுதி நோக்கி தீ பரவி வருகிறது. பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் இன்று (ஆகஸ்ட் 11) பக்தர்கள் சதுரகிரி மலையேறுவதை தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சதுரகிரி மலையில் காட்டுத்தீ பரவி வருவதால் இன்று (ஆகஸ்ட் 11) பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.