

சேலம் மாவட்டத்தில் சாம்பல் உப்புக்கொத்தி முதல் முறையாக பதிவாகியிருப்பதும், இது போன்ற அரிய பறவைகள் பண்ணவாடிக்கு வருகை தந்திருப்பதும், பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளிர்காலம் தொடங்கும் காலகட்டத்தில், ஐரோப்பிய கண்டப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான பறவைகள் உணவுத் தேடல் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக மிதவெப்பமண்டல நாடுகளை நோக்கி வலசை வருவது வழக்கம். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக சாம்பல் உப்புக்கொத்தி என்ற அரிய வலசைப் பறவை, மேட்டூர் அருகே பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் பதிவாகியுள்ளது. இதனை 'சிறகுகள் மற்றும் இயற்கை கழகம்' சார்ந்த பறவை ஆர்வலர்கள் மற்றும் செந்தில்குமார் மற்றும் ஷாஜான் ஆகியோர் பதிவு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சாம்பல் உப்புக்கொத்தி என்ற அரிய வலசைப் பறவை வலசைக் காலங்களில் மட்டுமே காணப்படும். ஐரோப்பிய பகுதிகளிலிருந்து கடல் பகுதிகளை நோக்கி நீண்ட தூரம் வலசை செய்யும் போது இடைப்பட்ட நாடுகளில் உள்ள ஏரிகளில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். அந்த வகையில், கடலை நோக்கி பயணித்த இந்தப் பறவை பண்ணவாடி நீர்த்தேக்கத்தைக் கண்டதும் இங்கு இறங்கி சில நாட்கள் தங்கியிருக்கக் கூடும். பொதுவாக இப்பறவை குளிர்காலங்களில் இந்தியா, இலங்கை மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளின் கடலோரப் பகுதிகளுக்கு வலசையாக வருவது குறிப்பிடத்தக்கது. என்றனர்.