

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு பிரச்சினையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் காஸ் முகக்கவசம் அணிந்தபடி நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் காஸ் முகக்கவசத்துடன் வந்தனர்.
முதலாவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் தீபிந்தர் சிங் ஹூடா, காஸ் முகக்கவசத்துடன் வருகை தந்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வேறு சில தலைவர்களும் காஸ் முகக்கவசத்துடன் வருகை தந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
காங்கிரஸ் மூத்த எம்.பி. தீபிந்தர் சிங் ஹூடா கூறும்போது, “காற்று மாசுப் பிரச்சினைக்கு மற்ற மாநிலங்கள், எதிர்க்கட்சிகளை குறை கூறுவதை விட்டுவிட்டு, உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மாநில முதல்வர்களைக் கொண்டு குழு அமைத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி விரிவான திட்டத்தைத் தயாரிக்கலாம். இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுவதைத் தடுக்க முடியும்” என்றார். டெல்லியில் நேற்று காற்று தரக்குறியீடு 356-ஆக (மிக மோசம்) இருந்தது குறிப்பிடத்தக்கது.