

கூடலூர்: ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்க வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 13 இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டு, கடந்த 20 நாட்களாக புலியைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பாரம் அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியில் புலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று சிக்கியது. கூண்டில் சிக்கியிருந்த சிறுத்தையின் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், புலி சிக்கியிருப்பதாக நினைத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறையினர், கூண்டில் புலி அல்ல, சிறுத்தை சிக்கியிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
புலியைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மனிதர்களைக் கொன்றதாகக் கூறப்படும் புலியைப் பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.