

மதுரை: கொடைக்கானல் சரணாலயப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் ‘கேம்ப் பயர்’, இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், செல்வகணபதி உள்ளிட்ட 5 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ஆனைமலை புலிகள் காப்பகம் விரிவுபடுத்தப்பட்டு கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் வனப்பிரிவில் சில பகுதிகள் இணைக்கப்பட்டன. இப்பகுதியில் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி பெறாமல் விடுதிகள், ஹோட்டல்கள், பூங்காக்கள் அமைக்கக் கூடாது. ஆனால், கொடைக்கானலில் முறையான அனுமதி இல்லாமல் வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே, மன்னவனூர் கிராமத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதியில் வணிக கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க தடை விதித்தும், மன்னவனூர் கிராமத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட வணிக கட்டிடங்களை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், இங்குள்ள வணிக ரீதியான கட்டிடங்களில் ஒவ்வொரு நாளும் ‘கேம்ப் பயர்’ அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலர், ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வன பாதுகாவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இங்குள்ள தனியார் விடுதிகளில் ‘கேம்ப் பயர்’ மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. இந்த மனு, வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர்.