

கொரட்டூர் ஏரி
சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஏரி நீர், குடிநீராகப் பயன்படுத்தப்படும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் உருவாகும் கழிவுநீர் அதில் கலப்பதாக நாளிதழ் ஒன்றில் கடந்த 2023 நவம்பர் மாதம் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ‘மாடம்பாக்கம் ஏரியில் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளை சோதனை செய்ததில், மல கோலிஃபார்ம் என்ற பாக்டீரியா அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளது. இதன்மூலம் நீரில் மனிதக் கழிவு கலந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே, இந்த நீர் குடிக்கவும், இதர பயன்பாட்டுக்கும் உகந்தது இல்லை. ஏரி அமைந்துள்ள மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 11.52 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது.
ஆனால், இதை சுத்திகரிக்கும் அளவுக்கு உள்ளாட்சி அமைப்பிடம் கட்டமைப்பு இல்லாததால், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஏரியில் விடப்படுகிறது’ என்று மாசுக் கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை தாம்பரம் மாநகராட்சி முடிக்க வேண்டும்.
ஏரிக்கு மழை நீர் வடிகால் வழியாக கழிவுநீர் வரும் வழிகளை அடையாளம் கண்டு நிரந்தரமாக அடைக்க வேண்டும். கழிவுநீரை முறையாக சேகரித்து சுத்திகரிக்க வேண்டும். விதிகளை மீறி கழிவுநீரை திறந்துவிடும் குடியிருப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியில் உள்ள நீரின் தரத்தை மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஏரியை சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் இருப்பதாக நீர்வளத் துறை கூறியுள்ளது. அறிக்கை தயாரிப்புக்குப் பிறகு, ஏரியில் உள்ள களைகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி, ஆக்கிரமிப்பில் இருந்து ஏரியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்த துறை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். சிஎம்டிஏ நிர்வாகம் இப்பகுதியில் மனைகளுக்கு அனுமதி அளிக்கும்போது, சுற்றுச்சூழல் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
‘சென்னை கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆக்கிரமிப்பில் இருந்து ஏரியை மீட்க வேண்டும்’ என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் கடந்த 2022-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தது.
மேற்கண்ட அதே அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு விவரம்: ‘கொரட்டூர் ஏரியை ஒட்டி, அம்பத்தூரில் இயங்கும் ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது, அதன் தொழிற்சாலை கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏராளமான குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து, கழிவுகளை முறையாக சுத்திகரிக்க உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது’ என்று மாசுக் கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, ஏரிக்கு செல்லும் கழிவுநீர் வழிகள் அனைத்தையும் சென்னை குடிநீர் வாரியம் உடனே கண்டறியவேண்டும். சட்டவிரோதமாக மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீர் இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளதா என ஆய்வு செய்து, அதை உடனே தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மடை மாற்றுவது போன்ற பணிகளை 6 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்.
ஏரியை அழகுபடுத்தும் பணி: நீர்வளத் துறை இந்த ஏரியை தூர்வாரி, நீரின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சென்னை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து 6 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். ஏரியை அழகுபடுத்தும் பணிகளை, ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.