

வைகை அணையின் நீர்பரப்பு குறைந்ததால் காமக்காபட்டி பகுதியில் குவிந்து கிடக்கும் சிப்பிகள்.
படங்கள்: என்.கணேஷ்ராஜ்
ஆண்டிபட்டி: வைகை அணை வறண்டதால் நுண்ணுயிர்கள், மெல்லுடலிகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. இதனால், நிலப்பரப்பு முழுவ தும் சிப்பிகளின் ஓடுகள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன.
வைகை அணை நீர்த்தேக்கம் 10 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. உச்ச அளவான 71 அடியை அணை எட்டும்போது, 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடி நீர் தேங்கி நிற்கும். அணை நீர் மூலம் பாசனம், குடிநீர், மீன்வளர்ப்பு போன்ற பயன்பாடு பிரதானமாக உள்ளது.
நீர்த்தேக்கத்தின் வளத்தை மேம்படுத்தும் ஏராளமான நுண்ணுயிர்களின் ஆளுமை அதிகம் உள்ளது. இதன்மூலம் கரிம, கனிம சிதைவுகள் ஏற்பட்டு இதர நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற வாழ்வியல் சூழலாக மாற்றப் படுகிறது.
அந்த வகையில், அணை நீரை ஆதாரமாகக் கொண்டு சிப்பி, நண்டு, நத்தை, பாக்டீரியா, பாசி, கிளிஞ்சல்கள் போன்ற ஏராளமான மெல்லுடலிகளும், நீர்வாழ் தாவரங்களும் வாழ்ந்து வருகின்றன.
உணவுச் சங்கிலியில் இந்த உயிரினங்களின் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று சார்ந்து வளமான நீரியல் சூழலை ஏற்படுத்தி வருகி்ன்றன.
இந்நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மே 29-ம் தேதி 20.51 அடியாக சரிந்தது. அணை வறண்டதால் நீர்த்தேக்கத்தின் பரப்பளவு வெகுவாய் குறைந்து நிலப்பரப்பு அதிகரித்தது.
இதனால், நீரை சார்ந்திருந்த பெரும்பாலான நுண்ணுயிர்களும், மெல்லுடலிகளும் உயிரிழந்தன. சிப்பிகள் ஓடு பிளந்து நீர்த்தேக்கப் பகுதி முழுவதும் குவியல் குவியலாக கிடக்கின்றன.
இதுகுறித்து நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியை ஜி.கே.திலகா கூறுகையில், நீர், நிலம் என்று பல்வேறு நிலைகளிலும் நுண்ணுயிர்களின் செயல்பாடே உணவு சங்கிலியை பலப் படுத்தி வருகின்றன.
நீரில் உள்ள உயிரினங்களுக்கு ஏற்ற வகையில், உணவை மாற்றி தருவதில் இதன் பங்கு அதிகம். ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதால், நீர்வாழ் உயிரினங்கள் பெருகி தண்ணீரின் வளமும் மேம்படுகிறது.
திலகா
தற்போது ஈரத்தன்மை குறைந்ததால் இவை பாதிக்கப்பட்டுள்ளன. சிப்பியின் ஓட்டுப் பகுதியான கால்சியம் கார்பனேட் வலுவாக இருப்பதால், எளிதில் இவை சிதைவுறுவது இல்லை. இந்த உயிரின் இறப்பை வெளிப்படையாக பார்க்க முடிகிறது என்றார்.