Last Updated : 10 Apr, 2023 01:21 PM

 

Published : 10 Apr 2023 01:21 PM
Last Updated : 10 Apr 2023 01:21 PM

சாதனை முயற்சி | 117 ஏக்கரில் 6.40 லட்சம் மரக்கன்றுகள்: பசுஞ்சோலையான ஒட்டன்சத்திரம் இடையகோட்டை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் சாதனை முயற்சியாக 117 ஏக்கர் பரப்பில் 4 மணி நேரத்தில் நடப்பட்ட 6.40 லட்சம் மரக்கன்றுகள் தற்போது பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது.

தமிழகத்தின் வனப்பரப்பை அடுத்து 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் துறை சார்பில் 10 ஆயிரம் குறுங்காடுகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. குறுகிய இடத்தில் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நடுவதன் மூலம் மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இங்கு "மியாவாக்கி" எனும் குறுங்காடு திட்டத்தை செயல்படுத்த இத்தொகுதி எம்எல்ஏ.வும், உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி முடிவு செய்தார்.

இதையடுத்து 117 ஏக்கர் நிலத்தை சுத்தம் செய்து சீரமைத்து மரக்கன்றுகள் நடுவதற்கு ஆயிரக்கணக்கில் குழி தோண்டும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணியின் போது 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை முயற்சியாக திட்டமிட்டனர். அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் உட்பட 16,500 பேர் இணைந்து 4 மணி நேரத்தில் 22 வகையான 6.40 லட்சம் மரக்கன்றுகளை நட்டனர்.

சாதனை படைத்ததற்காக 4 உலக சாதனை அங்கீகரிப்பு நிறுவனங்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியது. இங்கு மரங்கள் மட்டுமின்றி பொதுமக்களை கவருவதற்காக சிறுவர் பூங்கா, மரகதப் பூங்கா, மூலிகை பூங்கா, விநாயகர் குளம், ஊற்றுக் கிணறு, பசுமைக் கிணறுகள் உள்ளன. கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பிலும், வறண்டு போய் தரிசாக கிடந்த நிலத்தில் தற்போது மரங்கள் வளர்ந்து எங்கும் பசுமை போர்த்தியபடி பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது.

இந்த மரப்பூங்காவுக்குள் நுழைந்ததும் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதை உணர முடியும். இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், தினமும் 15 முதல் 20 பேர் வரை மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து பராமரித்து வருகின்றனர். வறட்சியாக இருந்த இடங்கள் இன்று பசுமையாக காட்சியளிக்கின்றன.

குறுங்காடுகளால் மண் வளம் பெருகுவதோடு, மழை பெறுவதற்கான சூழலும் அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஞாயிற்றுக் கிழமை மட்டும் பொதுமக்கள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x