தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு

தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரக பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தை ஒட்டி அமைந்துள்ள பாப்பாரப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது. தொடர்ந்து விளை நிலங்களில் நுழைந்து இந்த யானை பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு எர்ரனஅள்ளி கிராமத்தில் விளைநிலத்தில் இரவுக் காவலில் ஈடுபட்டிருந்த விவசாயியை இந்த ஒற்றை யானை தாக்கியதில் அவர் கால்கள் முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், இந்த ஒற்றை மற்றும் இதர யானை குழுக்கள் விளைநிலங்களில் நுழைவதை தடுக்க வேண்டும் என வனத் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் வலியுறுத்தியபோது அப்பகுதி மக்கள் - வனத்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்குதலில் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக வனத் துறையினரின் செயலையும், யானைகளை இடம்பெயரச் செய்வதில் நிலவும் அலட்சியத்தையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதுதவிர, விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் யானை விவகாரத்துக்கு தீர்வு ஏற்படுத்தக் கோரினர். இந்நிலையில், நேற்று (வியாழன்) இரவு ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தேவையான ஏற்பாடுகளை வனத் துறையினர் மேற்கொண்டனர். பாப்பாரப்பட்டி அடுத்த கிட்டம்பட்டி பகுதியில் இன்று (வெள்ளி) காலை வரை இந்தக் குழுவினர் காத்திருந்தபோதும் ஒற்றை யானை வனத்தில் இருந்து வெளிவரவில்லை.

இதற்கிடையில், ஒற்றை யானையை பிடிக்கும் பணியில் கும்கி யானையை ஈடுபடுத்தவும் வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கோவை அடுத்த ஆனைமலையில் இருந்து, 'சின்னத் தம்பி' என்ற கும்கி யானை இன்று வரவழைக்கப்பட்டுள்ளது.

விளைநிலங்களில் நுழைந்து சேதப்படுத்தும் ஒற்றை யானையின் நடமாட்டம் உள்ள பகுதியில் மயக்க ஊசி செலுத்தும் மருத்துவர் நிபுணர்கள் குழு மற்றும் கும்கி யானை குழுவினருடன் வனத் துறையினர் முகாமிட்டுள்ளனர். இப்பணிகளை மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, அதிகாரிகள் சரவணன், வில்சன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in