Published : 19 Jan 2023 07:53 PM
Last Updated : 19 Jan 2023 07:53 PM

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல் சூளைகள் இயங்க அனுமதி மறுத்த உத்தரவை நீட்டித்தது உயர் நீதிமன்றம்

கோவை தடாகம் பகுதி செங்கல்சூளை | கோப்புப்படம்

சென்னை: கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல் சூளைகள் இயங்க அனுமதித்த சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்ற உத்தரவை நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், செங்கற்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்க மறுத்து விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள யானைகள் வழித்தடங்களை பாதுகாக்கவும், யானைகள் வழித்தடங்களில் உள்ள செங்கற்சூளைகளை அகற்றக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கற் சூளைகளை தொடர்ந்து செயல்பட அனுமதித்து உத்தரவிட்ட சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தடாகம் பள்ளத்தாக்கில் எந்த சூளைகளும் செயல்பட அனுமதிக்கவில்லை.

இந்த செங்கற்சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு நிர்ணயிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழு அமைத்துள்ளது. இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை நிறுத்தி வைக்கும்படி பசுமைத் தீர்ப்பாயமும் உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது செங்கற்சூளைகள் தரப்பில், "அபராதத்தை செலுத்தி விடுவதாகவும், செங்கற்சூளைகளில் செய்து வைக்கப்பட்டுள்ள செங்கல்களை எடுக்க அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,"எந்த அனுமதியும் இன்றி செங்கற்சூளைகள் செயல்பட்டது சட்டவிரோதமானது அல்லவா? அபராதம் செலுத்தி விட்டு, சட்ட விரோத செயல்களை செய்யலாமா? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், செங்கற்சூளைகள் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்கும்படி, பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதுவரை, அபராதத் தொகையை செலுத்தி விட்டு செங்கற்களை எடுத்துச் செல்ல அனுமதித்த சுரங்கத் துறை ஆணையர் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்ற தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x