

புதுடெல்லி: ஐ.நா பருவநிலை மாற்றத்தின் 27-வது மாநாடு (சிஓபி 27) எகிப்தில் கடந்த 6-ம் தேதி முதல் நேற்றுவரை நடைபெற்றது. பருவநிலை மாற்ற பாதிப்புகளை சமாளிக்க புதிய நிதி தொகுப்பை உருவாக்கவேண்டும் என ஏழை நாடுகள் மற்றும் இந்தியா உட்பட வளரும் நாடுகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன.
ஆனால், இது குறித்த திட்டம் சிஓபி-27 வரைவு அறிக்கையில் இடம் பெறாமல் இருந்தது. மாநாட்டில் பங்கேற்று பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘‘சிறு விவசாயிகளுக்கு வேளாண்மை முக்கிய வாழ்வாதரமாக உள்ளது. பருவநிலை மாற்ற பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்படுவர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் இதர பாதிப்புகள் விவசாயிகளுக்கு சுமையாக இருக்க கூடாது’’ என்றார்.
இதையடுத்து பருவநிலைமாற்ற பாதிப்புக்கான இழப்பீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாநாட்டில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது: இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிஓபி மாநாட்டில் பருவநிலை மாற்ற பாதிப்புக்கு இழப்பீடுகளுக்கு நிதி தொகுப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்காகத்தான் உலக நாடுகள் நீண்ட காலமாக காத்திருந்தன.
இந்த விஷயத்தில் ஒருமனதான முடிவு எடுக்கப்பட்டதற்காக எகிப்து தலைமைக்கு வாழ்த்துகள். பருவநிலை மாற்றத்தில் வளர்ந்த நாடுகள் முன்னணியில் உள்ளன. பருவநிலைமாற்றத்துக்கு தீர்வு காணும் வகையிலான வாழ்க்கை முறைக்கு மாற முடிவெடுத்துள்ளதையும் வரவேற்கிறது இந்தியா. நீடித்த இலக்குகளை அடைய வளரும் நாடுகளுக்கு எரிபொருட்களை கலந்து பயன்படுத்தும் சுதந்திரம் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.