யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதால் மூடப்படும் நூற்றாண்டு பழமையான கல்லாறு பழப்பண்ணை

யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதால் மூடப்படும் நூற்றாண்டு பழமையான கல்லாறு பழப்பண்ணை

Published on

யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான கல்லாறு பழப்பண்ணையை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடர்ந்த மலைக்காட்டின் நடுவே, நீலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கல்லாறு பகுதியில், ஆண்டு முழுவதும் சீரான தட்ப, வெப்ப நிலை நிலவுகிறது. இங்கு 1900-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பழப்பண்ணை தொடங்கப்பட்டது.

சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில், அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பழப் பண்ணை, இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்துள்ளது.

ஆண்டு முழுவதும் சீரான சீதோஷ்ண நிலை நிலவும் இப்பண்ணையில் துரியன், மங்குஸ்தான், வெண்ணைப்பழம், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட மிக அரிதாக விளையக்கூடிய பழவகை மரங்கள் உள்ளன.

மேலும், 300-க்கும் மேற்பட்ட ‘சில்க் காட்டன் ட்ரீ’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இலவம் மரங்களும் உள்ளன.

இயற்கை எழில் சூழ்ந்த பகுதி என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை கவரும் வகையில், சிறிய அளவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் விளையாட வசதியாக ராட்டினங்களும் உள்ளன. கல்லாறு பழப்பண்ணை, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

யானைகள் வழித்தட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பாக உள்ளதால், பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யானை வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும், வன விலங்குகள் நடமாடும் பகுதியிலுள்ள வேலிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யானைகள் வழித்தடத்திலுள்ள கல்லாறு பழப்பண்ணை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் நிரந்தரமாக மூடப்படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "கல்லாறு பழப்பண்ணையை மூட, கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இப்பண்ணை மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக சிறுமுகை பகுதியில் வனத்துறை சார்பில் 20 ஏக்கர் மாற்றிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பண்ணையில் பிரத்யேகமான காலநிலையில் வளரும் பல அரிய வகை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள், பிற பகுதிகளில் வளராது" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in