Published : 08 Sep 2018 11:33 AM
Last Updated : 08 Sep 2018 11:33 AM

விவசாயிகளின் சங்கமம்: ஈரோடு இயற்கை வேளாண் திருவிழா 2018

ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில், ஆகஸ்ட் 26-ல் ‘இந்து தமிழ்’ நாளிதழ் இணைப்பிதழ் ‘நிலமும் வளமும்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘இயற்கை வேளாண் திருவிழா-2018’ காலை முதல் களைகட்டத் தொடங்கியது.

வரலாற்றுப் பெட்டகம்

விழாவைத் தொடங்கிவைத்த வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், "நாளிதழ்களைப் பொறுத்தவரை, ‘இந்து தமிழ்’ நாளிதழ் வருவதற்கு முன், வந்ததற்குப் பின் என்று இரு பிரிவாகப் பிரிக்க முடியும். அந்த அளவுக்கு 'இந்து தமிழ்' நாளிதழ் வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகிறது" என்றார். மேலும் பேசிய அவர், இயற்கை வேளாண்மையின் அவசியம், மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகியவை குறித்துப் பேசினார்.

‘கிரியேட்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலரான இரா. பொன்னம்பலம், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து விளக்கினார். "1995-ம் ஆண்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் சூழலியல் கட்டுரையாளர் சாய்நாத் எழுதிய விவசாயம் தொடர்பான கட்டுரைதான் விழிப்புணர்வை அளித்தது.

பாரம்பரிய நெல்லைக் காக்க வேண்டும் என்பதற்காக, 40 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, தலா 2 கிலோ வீதம் இலவசமாக வழங்கியுள்ளோம். இரண்டு கிலோ நெல் பெற்று நடவுசெய்தவர்கள், அறுவடைக்குப் பின் 4 கிலோவாகத் தர வேண்டும் என்பதே நாங்கள் விதிக்கும் நிபந்தனை. இதன் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள், பல்கிப் பெருகும்’ என்றார்.

மாப்பிள்ளைச் சம்பாவின் மகிமை

‘எனக்குத் தெரிந்த குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை. கடைசியாக, மாப்பிள்ளைச் சம்பா அரிசியை இரு ஆண்டுகள் பயன்படுத்தினர். அவர்களின் வேண்டுதல் நிறைவேறி, குழந்தை பிறந்தது. உணவே மருந்து என்ற தமிழரின் பாரம்பரிய கருத்து இதன்மூலம் உறுதியானது’ என்றார் சக்தி இயற்கை உர நிறுவனத்தின் மேலாளர் தியாகராஜன்.

மேலும் பேசிய அவர், “இதுவரை ஒன்றரை லட்சம் இயற்கை விவசாய ஆர்வலர்களை உருவாக்கி உள்ளோம். தனக்குத் தேவையானதை, தானே உருவாக்கிக் கொள்வதுதான் தற்சார்பு விவசாயம். இம்முறையைப் பின்பற்றும் விவசாயிகள், கடன்காரர்கள் ஆகவில்லை. இதைக் கைவிட்ட பின்புதான், விதையில் தொடங்கி அனைத்துக்கும் கடன்பெற்றுக் கடனாளியாக விவசாயி மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

எந்த நிலத்தில் மண்புழு அதிகமாக ஓடுகிறதோ, அந்த நிலம் வளமாக இருக்கும். மண்புழு வளர்ச்சியைத் தூண்டுவதற்காகவே, இயற்கை உரத்துக்கு மாறுங்கள்” என்றார்.

வருமானம் இரட்டிப்பாகும்

இயற்கை விவசாயம் குறித்த கருத்துரைகள் தொடர்ந்த நிலையில், ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது எப்படி?’ என்ற தலைப்பில் பேச வந்தார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பி.நல்லசாமி, “விவசாய விளைபொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால், நெல், கரும்பு போன்றவற்றைத் தவிர இதர பொருட்களை அவர்கள் கொள்முதல் செய்வதில்லை.

விவசாயம் வெற்றி பெற வேண்டுமானால், சந்தைப்படுத்துததலில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் உணவாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகள் நடைமேடையில், திறந்தவெளியில் விற்கிறது. காலில் அணியும் செருப்பு குளிர்சாதன அறையில் வைத்து விற்கப்படுவதுதான் நாட்டின் சோகம்” என்று முடித்தார்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்குவது குறித்தும், தங்களின் நிறுவனம் சார்பில் விளைபொருட்களை எடைபோடுதல், இருப்பு வைத்தல், விற்பனைசெய்ய உதவுதல் ஆகிய பணிகளைச் செய்வது குறித்தும் விளக்கிப் பேசினார் பி. நல்லசாமி.

ஆலங்குடி பெருமாள்

தொழில்நுட்பம் நெல் சாகுபடியில் அற்புதம் நிகழ்த்திக் காட்டிய ‘இயற்கை விவசாயி ஆலங்குடி பெருமாள் நெல் சாகுபடி தொழில் நுட்ப’த்தைப் பயன்படுத்தி, ஒரு ஏக்கரில் கால் கிலோ விதை நெல்லில் சாகுபடி செய்த நுட்பத்தை கதிராமங்கலம் எஸ்விஆர் இயற்கை வேளாண் பண்ணை நிர்வாகி ஆர்.ஸ்ரீராம் விளக்கியபோது, விவசாயிகள் ஆர்வத்துடன் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

“மண்ணை வளமாக்குவதைவிட, அதில் உள்ள வளங்களைச் சிதைத்துவிடக் கூடாது. வயலில் களைகளை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். மண்ணை வெப்பம் தாக்குவதைத் தடுக்க வேண்டும். விதைத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால், இயற்கை விவசாயம் மூலம் முதலாண்டிலேயே லாபம் ஈட்ட முடியும்” என உறுதிபடத் தெரிவித்தார் ஸ்ரீராம்.

இயற்கை விவசாயி ஆலங்குடி பெருமாள் தான் கண்டறிந்த நெல்சாகுபடி தொழில்நுட்பத்தை நிரூபிக்க சந்தித்த சிரமங்களையும், அவரின் சாதனையை, ‘இந்து தமிழ்’ நாளிதழ் மதிப்பீடு செய்து கட்டுரை வெளியிட்டது குறித்தும் தலைமை நிருபர் வி.தேவதாசன் விளக்கிக் கூறினார்.

தரத்தை அறிய வேண்டும்

ஈரோடு வேளாண்மை வணிகசபையின் தலைவர் வி.வெங்கடேஸ்வரன், ‘வேளாண் விளை பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முறைகள்’ குறித்து விளக்கமளித்தார். அவர் பேசும்போது “எந்த விளைபொருளாக இருந்தாலும், அதன் தரம் நமக்குத் தெரிய வேண்டும். அதன் அடிப்படையில் பொருட்களைப் பிரிக்க வேண்டும்.

‘இ-நார்ம்’ படி, இணையத்தில் நடக்கும் ஏலம் மூலம் அவற்றை விற்பனை செய்யும்போது, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை நாம் அறிந்து கொள்ள வேண்டும்” என்றார். உலகம் முழுமைக்குமான அச்சுறுத்தலாய் விளங்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயிகளை எப்படிப் பாதிக்கின்றன என்பது குறித்து இயற்கை வேளாண் ஆராய்ச்சியாளர் எம்.மணிவாசகன் தனது கருத்துரையை வழங்கினார்.

பஞ்சகவ்யத்தின் சிறப்பு

 ‘வயல்களை வளமாக்கும் பஞ்சகவ்யாவின் முக்கியத்துவம்’ குறித்து கொங்குத் தமிழில், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து கொடுமுடி டாக்டர் நடராஜன் பேசியபோது, விவசாயிகளின் கரவொலி அடிக்கடி எழுந்தது. பஞ்சகவ்யத்தின் முக்கியத்துவம், அதைத் தயாரிக்கும் முறையை அவர் விளக்கினார். அவரது உரையின் நடுவிலும், முடிவிலும் ஏராளமான விவசாயிகள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டனர்.

“ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்ட நிலங்களால், இந்தத் தலைமுறை மட்டுமல்லாது, அடுத்த தலைமுறையிலும், உணவு உண்ணும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலங்களை அரசாலோ கடவுளாலோ சரி செய்ய முடியாது. உழவர்களால் மட்டுமே சரி செய்ய முடியும்” இயற்கை வேளாண்மையில் வெற்றி கண்ட ஸ்ரீராமின் இந்தப் பேச்சு கருத்தரங்கை முழுமையாக்கியது. பார்வையாளர்களான விவசாயிகள் அவரது இந்தச் சொற்களை மனத்தில் கொண்டு விடைபெற்றனர்.சந்திரசேகர்மணிவாசகன்நட்ராஜன்ஸ்ரீராம்வெங்கடேஸ்வரன்நல்லசாமிபொன்னம்பலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x