பந்தலூரில் அரிசிக்காக வீடுகளை இடித்து வந்த ‘புல்லட்’ யானை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

பந்தலூரில் புல்லட் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பந்தலூரில் புல்லட் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
Updated on
1 min read

பந்தலூர்: பந்தலூரில் அரிசிக்காக வீடுகளை இடித்து வந்த ‘புல்லட்’யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட இளம் ஆண் யானை நீலகிரி மாவட்டம் பந்தலூர் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை இடித்து வந்தது. யானையை நிரந்தரமாக அடர் வனத்துக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இதனால், வனத்துறையினர் யானையை விரட்ட தனிக்குழு அமைத்து, கண்காணித்து வந்தனர். அப்படியிருந்தும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு சென்றது.

மதம் பிடித்த யானையின் சாணத்தில் ஸ்பிரே, புகை மற்றும் மிளாகாய் தூள் தடவப்பட்ட துணிகளாலான தோரணம் என பாரம்பரிய மாற்று வழிமுறைகளில் களம் இறங்கியது வனத்துறை. மேலும், பகலில் டிரோன் கேமராக்கள் மற்றும் இரவிலும் துல்லியமாக தெரியும் தெர்மல் கேமிரா மூலமும் அந்த யானையை 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

வனத்துறையினர், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உயர் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். எனவே, யானையை பிடித்து வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்படும் என மக்களுக்கு உறுதியளித்தனர். அதன்பேரில் கடந்த இரு நாட்களாக ‘புல்லட்’ யானை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இன்று (டிச.27) மாலை அய்யன்கொல்லி கோட்டப்பாடி வனப்பகுதியில் புல்லட் யானை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

சீனிவாசன் மற்றும் விஜய் ஆகிய கும்கிகளின் உதவியுடன் ‘புல்லட்’ யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்தவர் ராஜேஷ்குமார், புல்லட் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். யானையை முதுமலையில் அடர்ந்த வனப்பகுதி அல்லது வேறு இடத்துக்கு இடமாற்றம் நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in