

புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு பொறுப்பல்ல என்றும், இந்த பாதிப்பு குறைந்த மின் கட்டணத்தின் நன்மையை அனுபவித்த வளர்ந்த நாடுகளால் ஏற்பட்டது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) உச்சி மாநாடு 2024 புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இத்தாலி, இஸ்ரேல், பூட்டான், பஹ்ரைன், அல்ஜீரியா, நேபாளம், செனகல், தென்னாப்பிரிக்கா, மியான்மர், கத்தார் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உலகளாவிய தெற்கு அமைப்பு பொறுப்பல்ல. ஆனால், இந்த பாதிப்பு குறைந்த மின் கட்டணத்தின் நன்மையை அனுபவித்த வளர்ந்த நாடுகளால் ஏற்பட்டதாகும்.
சுற்றுச்சூழல், நீடித்த தன்மை ஆகியவற்றில் பங்குதாரர் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் பகிரப்பட்ட பொறுப்புகள் உள்ளன. ஆனால், இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பல்ல. எனவே, பகிரப்பட்ட விநியோகச் சங்கிலிகள் மற்றும் நிலைத்தன்மைக்கான பொறுப்புகள், பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பின் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அதேவேளையில், சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
உலகின் தெற்கு நாடுகளுக்கு நட்பு மற்றும் கூட்டாண்மையின் நம்பகமான கரங்களை இந்தியா வழங்குகிறது. நிலைத்தன்மை, விண்வெளி, செயற்கைக்கோள் ஆகியவை, வருகை தந்த அதிகாரிகளால் அதிகம் பேசப்பட்டது. இன்றைய உலகுக்கு இத்தகைய விவாதங்கள் தேவை. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கிமயமாக்கல் ஆகியவை, எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் மாறிவரும் வேலைவாய்ப்பு நிலவரத்திற்கேற்ப, தகவமைத்துக் கொள்ளும் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் வாழ்க்கையை மாற்றி, வாழ்வாதாரங்களின் தன்மையை மாற்றும். அதே நேரத்தில் பாரம்பரியமும் கலாச்சாரமும் சமமாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். எனவே, இது ஒருபுறம் பாரம்பரியம் மறுபுறம் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலவையாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.