

கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன புகையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஆலையை பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில் சத்தியமூர்த்தி நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புக்கு அருகே துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் புகை, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன. அதாவது, தொழி்ற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன புகை காற்றில் கலந்து, கடும் துர்நாற்றத்தை உருவாக்குவதோடு, சத்தியமூர்த்தி நகர் மற்றும் தொழிற்சாலையை சுற்றி வசிக்கும் மக்களின் உடல்நலனுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இப்புகையை சுவாசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், கடுமையான தலைவலி, தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதற்கு ஒரு தீர்வு காண வலியுறுத்தி சத்தியமூர்த்தி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியபடி, தொழிற்சாலையை இன்று (நவ.22) மதியம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசும் ரசாயன புகை வெளியேறுவதை தடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை போராட்டம் நடத்தியும் பலனில்லை. மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை’’ என்றனர். இவ்விவகாரம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டம் நடத்த வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.