தமிழகத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூனில் தொடங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், 2018-ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், முன்னோடி திட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், அந்த சதுப்பு நிலங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் .

மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இப்பணிகளுக்கு நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள அரசுக்கு அனுமதியளித்து, வழக்கின் விசாரணையை ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in