Published : 02 Apr 2024 02:09 PM
Last Updated : 02 Apr 2024 02:09 PM

‘அவிநாசியில் தரமற்ற குடிநீர் விநியோகம்’ - தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவிப்பு

திருப்பூர்: குடிநீர் தரமில்லாமலும், சுவையில்லாமலும் விநியோகிக்கப்படுவதாகக் கூறி அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மக்களவைத் தொகுதியின் கடைக்கோடி பகுதியான அவிநாசி பேரூராட்சியின் 18 வார்டுகள், சுற்றியுள்ள 31 ஊராட்சிகளையும் கொண்டதுதான் அவிநாசி தொகுதி. அன்னூர் - அவிநாசி - சாமளாபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது கூட்டுக் குடிநீர் திட்டங்கள் திருப்பூருக்கும் விரிவுபடுத்தப்பட்டதால், அவிநாசிக்கு கிடைக்கும் குடிநீரின் சுவை மாறியுள்ளதாகவும், தரமற்ற நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர் வி.கோபால கிருஷ்ணன் கூறும்போது, “அவிநாசிக்கு 3 குடிநீர் திட்டங்கள் இருந்தன. மக்கள் 2-வது குடிநீர் திட்டமான மேட்டுப்பாளையம் தண்ணீர் கேட்கிறார்கள். காலை 3 மணிநேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் விநியோகம் செய்ய சொல்கிறார்கள். தற்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரில் சுவையோ, தரமோ இல்லை. பவானி ஆற்றில் வரும் நீர், மேட்டுப்பாளையம் செல்லும் முன்பே அவிநாசிக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீரை உரிய தரத்துடன் விநியோகிக்க வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக அவிநாசி பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அவிநாசி சுற்றுப் பகுதிகளில் போதிய அளவில் பருவமழை பெய்யவில்லை. நிலத்தடி நீரை நம்பித்தான் பலரும் விவசாயம் செய்து வருகின்றனர். அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் நிறைவடைந்தும், இதுவரை பயன் பாட்டுக்கு வரவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டுமின்றி, குடிநீருக்கும் சிரமப்பட்டு வருகிறோம். குடிநீர் கேன்களை விலைக்கு வாங்கி பயன் படுத்த வேண்டிய நிலை இருப்பதால், மாதந்தோறும் பெரும் தொகையை குடிநீருக்காக செலவழிக்கிறோம்.

இப்பகுதிகளில் உரிய சுத்திகரிப்பு செய்யாமல், குடிநீர் விநியோகிக்கப்படுவதால், பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அசுத்தமான குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு, காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, அவிநாசி பேரூராட்சியின் 12 மற்றும் 14-வது வார்டுகளில் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் சார்பில் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அவிநாசி பேரூராட்சியின் 13-வது வார்டுக்குட்பட்ட காந்திபுரம், வாணியர் வீதி ஆகிய பகுதிகளிலும் குடிநீர் சுத்தமின்றி விநியோகிக்கப் படுவதாகக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனில், பல ஆண்டுகளாக வழங்கி வந்த 2-வது கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மீண்டும் குடிநீர் விநியோகிக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x