தருமபுரி அருகே நார்த்தம்பட்டி ஏரிக்கு இடம்பெயர்ந்த ஒற்றை யானை

தருமபுரி அருகே நார்த்தம்பட்டி ஏரிக்கு இடம்பெயர்ந்த ஒற்றை யானை
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஏரியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்ய வனத்துறையினர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரக பகுதியில் இருந்து காரிமங்கலம் பகுதியில் ஒற்றை ஆண் யானை நடமாடி வருகிறது. செட்டிக்கரை வழியாக தருமபுரி வனச் சரகத்துக்கு உட்பட்ட வேடியப்பன் திட்டு பகுதிக்கு நேற்று முன்தினம் வந்த ஒற்றை ஆண் யானை அன்றிரவு அருகிலுள்ள அன்னசாகரம் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை குட்டூர் ஏரிக்கரை பகுதிக்கு சென்ற யானை பின்னர் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. எனவே, வனத்துறையினர் ‘ட்ரோன்’ கேமரா மூலம் தொடர்ந்து சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

இதில், நேற்று மாலை நல்லம்பள்ளி ஒன்றியம் லளிகம் அருகிலுள்ள நார்த்தம் பட்டி ஏரிக்குள் யானை முகாமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், யானையை தெற்கு நோக்கி தொப்பூர் காப்புக் காடு பகுதிக்கு இடம் பெயரச் செய்தால் அங்கிருந்து தொடர்ச்சியாக அமைந்துள்ள வனப்பகுதி வழியாகவே ஏரியூர் காவிரிக் கரையோர பகுதிக்கு யானையை இடம் பெயரச் செய்யலாம் என்ற திட்டத்துடன் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பையும், இடம் பெயரச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தேவை ஏற்பட்டால் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து அடர்வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள அதற்கான குழுக்களையும் மாவட்ட வனத்துறை தயார்படுத்தி வைத்திருப்பதும் குறிப்பிடத் தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in