Published : 05 Mar 2024 03:57 PM
Last Updated : 05 Mar 2024 03:57 PM

சத்தியமங்கலத்தில் உயிருக்குப் போராடிய தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உயிருக்கு போராடி வந்த யானை மரணமடைந்துள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோயில் அருகே, நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. உடல் நிலை சரியில்லாத தாய் யானை, அப்பகுதியில் உள்ள வனத்தில் மயங்கி விழுந்தது. இதைப்பார்த்த அதன் குட்டி யானை, தாய் யானையைச் சுற்றி வந்து பிளிறியபடி இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்தனர். கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினர். 40 வயதான தாய் யானை, வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளது. யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கும் போது, 2 மாதமே ஆன, அதன் குட்டி யானை சுற்றி வந்து பிளிறியபடியே இருந்தது.

பண்ணாரி சாலையின் அருகில், இந்த சம்பவம் நடந்த நிலையில், குட்டி யானை சாலைப் பகுதிக்குச் சென்று, வாகனத்தில் அடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, வனத் துறையினர் 5 அடி ஆழத்தில் குழி தோண்டி, அதில் குட்டி யானையை இறக்கி, பாதுகாத்தனர். குட்டி யானைக்குத் தேவையான பால் மற்றும் நீர் வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் பவுடரை கலக்கி கொடுத்து பசியாற்றி உறங்க வைத்து பராமரித்தனர். குட்டி யானை பின்னரே தாய் யானைக்கு வனத்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிந்தது.

எனினும், தாய் யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருந்த நிலையில் மருத்துவ குழுவின் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தாய் யானை உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளதோடு, "துணிச்சலான தாய் யானை தனது கடைசி மூச்சு வரை போராடியது. அனுபவம் வாய்ந்த நான்கு கால்நடை மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து யானையை உயிர்ப்பிக்க முயன்றனர். ஆனால் யானையின் உயிரைக் காப்பாற்றும் போராட்டம் இன்று தோல்வியில் முடிந்தது. நாங்கள் மனம் உடைந்துள்ளோம்." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தாயை விட்டு பிரிய முடியாமல் தவித்த இரண்டு மாதங்களே குட்டி யானையின் பாசப் போராட்டம் குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x