Last Updated : 01 Mar, 2024 06:33 PM

 

Published : 01 Mar 2024 06:33 PM
Last Updated : 01 Mar 2024 06:33 PM

ஏற்காடு அடிவாரத்தில் காட்டு மாடு தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே வயலுக்கு சென்று விவசாயி மாதையன் (42) என்பவரை காட்டு மாடு தாக்கியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குப்பனூர் அருகே வைதாதனூரைச் சேர்ந்த விவசாயி மாதையன் (42). இவருக்கு சரஸ்வதி (40) என்ற மனைவியும், 13 மற்றும் 5 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு நீர், தீவனம் வைப்பதற்காக காலையில் சென்றார்.

விவசாய நிலத்தின் பாசனக் கிணறு அருகே சென்றபோது, மலையடிவாரத்தில் இருந்து ஓடி வந்த காட்டு மாடு ஒன்று மாதையனை முட்டி தூக்கி வீசியது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மாதையன் உடலில் பலத்த காயங்களுடன், கிடந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மாதையனை ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்ததுபோது, அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வீராணம் காவல் துறைக்கும், சேர்வராயன் வடக்கு வனச்சரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீராணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி, மாதையனின் சடலத்தை, உடற்கூறு ஆய்வுக்காக, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்டத்தில் கோடை காரணமாக வறட்சி நிலவும் நிலையில், குடிநீருக்காகவும், இரை தேடியும் காட்டு மாடு, காட்டுப் பன்றி, மான், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால் வனத் துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பலர் வலியறுத்தி பேசியிருந்தனர். இந்நிலையில், காட்டு மாடு தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x