முதுமலையில் யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம்

முதுமலையில் யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம்
Updated on
1 min read

முதுமலை: முதுமலையில் காட்டு யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் காயமடைந்தார். அவரை வன ஊழியர்கள் சிகிச்சைக்காக கூடலூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொரப் பள்ளி பிரிவு சீனக் கொல்லிவயல் பகுதியில் வன ஊழியர்கள் தினசரி ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் புதரிலிருந்து வெளியே வந்த காட்டு யானை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக வேட்டைத் தடுப்பு காவலர் சிவக் குமாரை தாக்கியது.

அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் யானையை விரட்டி அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in