Published : 03 Dec 2023 04:12 AM
Last Updated : 03 Dec 2023 04:12 AM

சபரிமலைக்கு செல்லும் வழித்தடத்தில் நடமாடிய 88 காட்டுப்பன்றிகள், 59 பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவிப்பு

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் நடமாடிய 88 காட்டுப்பன்றிகள், 59 பாம்புகளை பிடித்த வனத்துறையினர், அவற்றை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

கேரள மாநிலம் சபரிமலையில் கடந்த 16-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில், வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், இக்கோயில் மாதத்தின் முதல் 5 நாட்கள் உள்ளிட்ட முக்கிய தினங்கள் மற்றும் மண்டல, மகர பூஜையின் போது மட்டுமே திறக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிக அளவில் இருக்கும்.

இக்கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் விலங்குகளை கண்காணிக்க வனத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 88 காட்டுப்பன்றிகள் கூண்டுகள் மூலம் பிடிக்கப் பட்டுள்ளன. அதேபோல் 59 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் கொண்டு சென்று விடுவித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக, விலங்குகளை பிடிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்ற அலுவலர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் எருமேலி, புல்மேடு பகுதிகளில் அதிநவீன கருவிகள் மூலம் விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகளை கையாள்வதற்கான உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மலைப் பகுதியில் குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குரங்குகளுக்கு பக்தர்கள் உணவு வழங்க வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x