Last Updated : 25 Jul, 2023 03:15 PM

 

Published : 25 Jul 2023 03:15 PM
Last Updated : 25 Jul 2023 03:15 PM

தோல் கழிவுநீரால் பாழடைந்த விவசாய நிலத்தில் வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு @ திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் கழிவுநீரால் பாழடைந்த நிலத்தில் எந்த மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யலாம் என்ற ஆராய்ச்சி நடத்த நடவடிக்கை எடுத்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் பொன்னாடை அணிவித்து நன்றியை தெரிவித்தனர்.படம். ந.சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது முறையாக சுத்திகரிக்கப்படாமல் அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள், பாலாறு போன்ற நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தோல் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்து,இந்த பகுதியை சுற்றிய ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிட்டதாக விவசாயிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தோல் கழிவுகளால் பாழடைந்த விளை நிலங்களில் விவசாயிகள் எந்த பயிரை பயிரிட்டாலும், அந்த பயிர் வகை எதிர்பார்த்த மகசூலை தரவில்லை என்பதால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்று விட்டு, எந்த தொழிற்சாலையால் தங்களது வாழ்வாதாரம் அழித்ததோ, அதே தொழிற்சாலைகளில் கடைமட்ட தொழிலாளர்களாக வேலைக்கு செல்லும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், விவசாயத்தை மட்டுமே உயிர்நாடியாக நம்பியுள்ள சொற்ப விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்காமல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பயிரியை பயிரிடலாம் என வேளாண்மை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து, அதற்கு ஏற்றார்போல விவசாய தொழிலை தற்போது வரை செய்து வருகின்றனர். இருந்தாலும், கழிவுநீரால் பாழடைந்த விவசாய நிலத்தில் எதிர்பார்த்த மகசூலை பெற விவசாயிகளுக்கு போதுமான விழிப்புணர்வு வேளாண்மை துறையினரால் வழங்கப்படவில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு தற்போது வரை உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர். அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தின் தன்மையை அறிய வேண்டும்.

மண் பரிசோதனை செய்ய வேண்டும், தண்ணீரையும் பரிசோதனை செய்து, கழிவுநீரால் மாசடைந்த விவசாய நிலத்தில் எந்த மாதிரியான பயிர்களை சாகுபடி செய்தால், விளைச்சல் பெறலாம். பாழடைந்த விளை நிலத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை வேளாண்மை ஆராயச்சியாளர்களால் கண்டறிந்து, அதை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகளை தொடர்பு கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் மண், நீர்வளத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கடிதம் எழுதினார்.

இதைத்தொடர்ந்து, விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் திருமுருகன், உதவி பேராசிரியர் பரமசிவம், திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், பொதுப்பணித் துறை, வேளாண்மை துறை அதிகாரிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஆய்வு குழுவினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தோல் கழிவுநீரால் பாழடைந்ததாக கூறப்படும் விவசாய நிலங்களில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் வட்டம் வடச்சேரி, மேல் சாணாங்குப்பம், மணியாரக்குப்பம், வெங்கட சமுத்திரம், பனங்காட்டூர், நாயக்கனேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட இந்த குழுவினர் அங்குள்ள மண் வளம், நீர் வளம் ஆகியவற்றின் மாதிரியை சேகரித்தனர். இதில் விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும், அதைச் சுற்றியுள்ள 147 ஏக்கர் தரிசு நிலத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாதிரியாக சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர் ஆகியவை சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்த பிறகு, விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் மீண்டும் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் ஆய்வு செய்து, அங்கு எந்த வகையான பயிர் சாகுபடி செய்யலாம், அதில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? தண்ணீர் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.

என்ன மாதிரியான பயிர்கள் இந்த பகுதியில் உள்ள நிலத்தில் விளையும், அதிக லாபம் பார்க்க என்ன வழி முறை என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கையாக அளிக்கவுள்ளனர். இதன் மூலம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை அழைத்து அவர்களுக்கான ஆலோசனைகளும், விழிப்புணர்வு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த விவசாயிகள் அவருக்கு பொன்னாடை வழங்கி தங்களது நன்றியை தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x