ஈஷா நடத்தும் விவசாய கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர்

ஈஷா நடத்தும் விவசாய கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர்
Updated on
2 min read

புதுக்கோட்டை: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை (ஜூலை 16) நடத்தும் விவசாய கருத்தரங்கை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கவுள்ளார்.

இது குறித்த ஈஷாவின் செய்திக் குறிப்பு: காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது: “இக்கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர்.கண்டியண்ணன் மற்றும் டாக்டர்.முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்து கொண்டு சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.

இக்கருத்தரங்கு சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து வரும் இவர், தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு வளர்த்து வருகிறார். இரண்டு ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து வருடத்திற்கு நான்கு லட்சம் லாபம் ஈட்டுகிறார்.

மரப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர் வருமானம் பெறும் வழிமுறைகளை காவேரி கூக்குரல் இயக்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. மரப்பயிர்களில் ஊடுபயிராக காய்கறிகள், சிறுதானியங்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை பல விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

இதனால் மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்திற்கு காத்திருக்காமல் ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் பெறுகிறார்கள். பெரும்பாலான நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாக உள்ளதால் சரியான சூழ்நிலையை உருவாக்கி மர விவசாயிகள் அதிக வருமானம் பெற இயலும்.

ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது மற்ற நறுமணப்பயிர்களும் சமவெளியில் நன்கு வளர்வதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது.

விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளமுடியும். பயிற்சியில் கலந்து கொள்ள 94425 90079 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in