உரிகம் வனப்பகுதியில் குட்டியுடன் வலம் வரும் யானைகள்

அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதியில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட தொட்டியில் குட்டியுடன் தண்ணீர் பருகிய யானைகள்.
அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதியில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட தொட்டியில் குட்டியுடன் தண்ணீர் பருகிய யானைகள்.
Updated on
1 min read

ஓசூர்: அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதியில் வனத்துறையின் தண்ணீர் தொட்டியில் குட்டியுடன் தண்ணீர் குடிக்க வந்த யானைகளை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்து கடந்தாண்டு 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் அருகே தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வலசை வந்தன. அவை தனித்தனி குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் சுற்றியதோடு, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தன.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வனத்துறையினர் தனித்தனிக் குழுக்களாகச் சுற்றிய யானைகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து ஜவளகிரி வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்தனர். இதில், 50-க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் தொடர்ந்து, தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் வனப்பகுதியில் நிரந்தரமாக தங்கிவிட்டன.

இதையடுத்து, யானைகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க வனத்துறை மூலம் வனப்பகுதியில் சூரிய சக்தி தடுப்பு வேலிகள் மற்றும் யானைகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தொட்டிகள் அமைத்து தண்ணீரை நிரப்பி வருகின்றனர். இதனால், தற்போது யானைகள் வனத்தைவிட்டு கிராமப் பகுதிகளுக்கு வருவது குறைந்துள்ளது.

இந்நிலையில், அஞ்செட்டி அருகே உடுபராணி, நூருந்துசாமிமாலை, உரிகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி வந்தன. இதில், 3 யானைகள் குட்டியுடன் அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருக வந்தன. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று குட்டியுடன் சுற்றிய யானைகளை வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in