மீண்டும் விளைநிலங்களில் நுழைந்தது மக்னா - 2 கும்கிகளுடன் வனத்துறையினர் கண்காணிப்பு

மீண்டும் விளைநிலங்களில் நுழைந்தது மக்னா - 2 கும்கிகளுடன் வனத்துறையினர் கண்காணிப்பு
Updated on
1 min read

பொள்ளாச்சி: வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்னா யானை மீண்டும் விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து கோவையை நோக்கிச் சென்றது. அங்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, மானாம்பள்ளியில் உள்ள மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது.

ரேடியோ காலர் கருவி பழுதாகி விட்டதால் யானையின் நகர்வை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், மக்னா யானை சரளபதி கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகளான சின்ன தம்பி, சுயம்பு ஆகிய இரு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானையின் நடமாட்டம் உள்ள பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மக்னாவை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in