Published : 05 Jun 2023 04:40 PM
Last Updated : 05 Jun 2023 04:40 PM

நகரங்களில் பெருகும் மக்கள்தொகையால் ஆக்சிஜன் உற்பத்திக்கு மரம் வளர்ப்பு அவசியம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

திருச்சி பொன்னகர் பகுதியில் சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறையினரால் நட்டு வளர்க்கப்பட்டுள்ள மரங்கள்.

திருச்சி: வளர்ந்து வரும் நகரங்களில் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப கான்கிரீட் வீடுகள் அதிகரித்தும் வரும் நிலையில், மக்களின் சுவாசத்துக்கு இன்றியமையாத ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க மரம் வளர்ப்பு மிக அவசியம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். பெரும்பாலான சாலைகளின் இருமருங்கிலும் இருந்த மரங்கள் சாலை விரிவாக்கத்துக்காக அவ்வப்போது வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

பல இடங்களில் இவ்வாறு அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1:10 என்ற அளவில் மரக்கன்றுகள் நடப்படுவதாக சொல்லப்பட்டாலும், அவை முறையாக நடப்படவில்லை, நட்ட மரங்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.

பணி, குழந்தைகளின் கல்வி, நகர மோகம் உள்ளிட்டவை காரணமாக கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், நகர்ப்புறங்களில் மக்கள்தொகையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்கள் குடியிருக்க தேவையான வீடுகளும் அதிரித்து வருகின்றன. இந்த வீடுகளை கட்ட வயல்வெளிகளும், சமவெளிகளில் உள்ள மரங்களும் அழிக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை, குப்பை உள்ளிட்டவற்றால் ஏற்படும் காற்றுமாசு காரணமாக வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக வருங்காலத்தில் நாம் சுவாசிக்கவே ஆக்சிஜனை காசு கொடுத்து வாங்க வேண்டிய அபாயம் ஏற்படும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இதுகுறித்து திருச்சி ஜமால்முகமது கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் பி.பாலகுரு `இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியது: பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆக்சிஜனை வழங்கும் அளவுக்கு மரங்கள் இல்லை. ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க தேவையான அளவுக்கு மரங்கள் வளர்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக, வேம்பு அதிக அளவில் நமக்கு ஆக்சிஜனை தரக்கூடியது.

இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொலையுணர்வு செயற்கைக்கோள் மூலம் பேராசிரியர் எம்.காமராஜ் ரவிக்குமார் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டோம். இதில், திருவெறும்பூர், பொன்மலை, ஸ்ரீரங்கம் ஆகியவை அதிக மரங்கள் கொண்ட பகுதிகளாகவும், தில்லைநகர், உறையூர், தென்னூர் உள்ளிட்ட பகுதிகள் மரங்கள் குறைந்த பகுதிகளாகவும் கண்டறியப்பட்டன. திருச்சி மாநகரில் மக்கள்தொகை ஏறத்தாழ 12 லட்சம். ஆனால் 52 ஆயிரம் மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் அளவுக்கு மட்டுமே மரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன், சுழற்சியாகும் வளிமண்டலத்திலிருந்து தான் கிடைக்கிறது. ஆனால், தற்போதைய வளிமண்டலம் வாகனங்கள் வெளியிடும் கரியமில வாய்வாலும், குப்பையை எரிப்பதால் ஏற்படும் தூசி, புகை உள்ளிட்ட வற்றாலும் மாசடைந்து, தூய்மையற்று காணப்படுகிறது.

திருச்சி மாநகரில் வாழும் மக்களுக்கு மட்டும் முழு அளவுக்கு ஆக்சிஜன் வழங்க ஏறத்தாழ 3 லட்சம் மரங்கள் நடப்பட வேண்டியது அவசியம். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பிற அரசுத் துறைகள் சார்பில் விழாக்களின்போது வைக்கப்படும் மரக்கன்றுகள் முறையாக வளர்க்கப்பட்டாலே ஆக்சிஜன் பற்றாக்குறை ஓரளவுக்கு தீரும்.

எனவே, வரும் மழைக்காலத்தை கவனத்தில் கொண்டு இந்த நாட்களில் வீதிகள் மட்டுமின்றி பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, அந்தந்த தெரு அல்லது குடியிருப்போர் நலச் சங்கங்களிடம் அவற்றை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இன்று குடிநீரை பணம் கொடுத்து வாங்குவது போன்று, நாம் சுவாசிக்க ஆக்சிஜனையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x