

வேலூர் விஐடியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முயற்சிக்கு தின்குவேட் முதலீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன். உடன் விஐடி துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர்.
வேலூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த தின்கு வேட் மற்றும் இந்தூரைச் சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவனங்கள் மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம், தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்யவுள்ளன. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும் முதலீட்டு நிறுவனமான தின்குவேட், முதல்கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது. டீப்டெக், ஃபின்டெக், ஹெல்த்டெக் தொழில் துறைகளில் கவனம் செலுத்தும். இந்த ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.
ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு: ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தின்குவேட் நிறுவனம் உதவி வருகிறது.
அதேபோல, வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனம் நிஜ உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு ஆகியவைகளில் இணைந்து செயல்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் அடிசன் அப்பு மற்றும் வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹர்ஷவர்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோர் பரிமாறிக்கொண்டனர். இதில், விஐடி துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் இயக்குநர் சிதம்பரம் ரமேஷ்குமார், முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், நோர்டிக் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வர்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும், விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.