

மதுரை: மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தில் சூரிய ஒளி மின் வசதியுடன் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் பசுமை பள்ளித் திட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம், பழத்தோட்டம், மூலிகைத் தோட்டம் அமைக்கப்படுகிறது.
இதில் சூரிய ஒளி மின்சார வசதியுடன் ஆழ்துளைக் கிணறு அமைப்பது உட்பட ரூ.20 லட்சத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி காய்கறி தோட்டத்தில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, முள்ளங்கி, கீரை, வெங்காயம் பயிரிடப்படுகிறது.
அதேபோல், பழத்தோட்டத் தில் கொய்யா, நெல்லி, சப்போட்டா, நாவல், கொடுக்காப்புளி, எலுமிச்சை, வாழை பயிரிடப்படுகிறது. மூலிகைத் தோட்டத்தில் பிரண்டை, கற்றாழை, நொச்சி, கறிவேப்பிலை, கற்பூரவள்ளி, துளசி, ஆடாதோடா போன்றவை பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள், பழங்கள், மூலிகைகளை மாணவர்கள் பயன்படுத்த வழி ஏற்படுத்தப்படுகிறது.
அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தில் சூரிய ஒளி மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த தோட்டங்களை பராமரிக்க தோட்டக் காவலாளி ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதன்படி மதுரை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டு முதல் தற்போது வரை 14 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
இதில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் உற்பத்தியாகும் காய்கறிகள் சத்துணவுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து அலங்கா நல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் கா.காமாட்சி கூறுகையில், பசுமைப்பள்ளி திட்டத்தில் காய்கறி தோட்டம், பழத்தோட்டம், மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சூரிய ஒளி மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடவு செய்ததில், தற்போது அறுவடை செய்து வருகிறோம்.
பந்தல் சாகுபடியில் பீர்க்கை, புடலை, பாகல் ஆகியவையும் விளைந்து அறுவடை செய்து சத்துணவுக்கு பயன்படுத்துகிறோம். இதன்மூலம் மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம், இயற்கையை நேசிப்பதையும் அறிந்து கொள்கின்றனர் என்று கூறினார்.