

சென்னை: இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் முறையான அனுமதியின்றி மாணவர் சேர்க்கை நடத்தியதற்காக 3 தனியார் சட்டக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஒழுங்கு முறை விதிகளின் படி, சட்டக் கல்லூரிகளில் சில நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டு, அரசு ஆணை மற்றும் இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதல் ஆகிய வற்றால் மாணவர் சேர்க்கை முறைப்படுத்தப்படுகிறது.
தற்காலிக இணைப்பு: அதன்படி, ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் தூத்துக்குடி துளசி மகளிர் சட்டக் கல்லூரி, தென்காசி எஸ்.தங்கபழம் சட்டக் கல்லூரி, குமரியில் உள்ள முகில் சட்டக்கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளுக்கு கடந்த கல்வி ஆண்டுக்கான தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டது.
விதிகளுக்கு முரணானது: 'வழக்குரைஞர் மன்ற ஒப்புதல் கிடைத்துவிடும்' என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று பல்கலைக்கழக விதிமுறைகளும், தற்காலிக இணைப்பு நிபந்தனைகளும் தெளிவாக கூறுகின்றன. அதையும் மீறி அக்கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தியது பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது.
எனவே, சிண்டிகேட் தீர்மானத்தின்படி, 3 சட்டக் கல்லூரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான, தற்காலிக இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், 2026- 27ம் கல்வி ஆண்டுக்கான தற்காலிக இணைப்பு நீட்டிப்பு கோரி தூத்துக்குடி துளசி மகளிர் சட்டக்கல்லூரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டாம் என பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு தீர்மானித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.