சென்னை: சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தம்பி செல்வவேலின் மருத்துவப் படிப்புக்காக ரூ.5 லட்சம் பண உதவி செய்துள்ளார்.
படிப்பை முடித்த பிறகு தனது மகளை திருமணம் செய்து கொள்வதாக செல்வவேல் உறுதியளித்ததால், பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவப் படிப்பை முடித்த செல்வவேல், வேறொரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். செல்வவேலுக்கு தஞ்சாவூர் மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணி கிடைத்துள்ளது.
அந்த பெண்ணின் மற்றொரு மகள் சட்டப்படிப்பில் சேருவதற்காகப் பணம் தேவைப்பட்டதால் அந்த இளம் பெண் தனது தாய் மாமன் செல்வவேலிடம் பணத்தைத் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செல்வவேல், அந்த இளம் பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியதோடு, தனது நிர்வாண புகைப் படத்தையும் வாட்ஸ்- அப்பில் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதில் மன உளைச்சலான இளம்பெண், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், அரசு மருத்துவர் செல்வ வேலை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அரசு மருத்துவராகப் பணியில் சேர்ந்த 3 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.