

கோப்புப் படம்
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு `டெட்' தேர்ச்சி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமன விதிமுறைகள் தொடர்பான 7 அரசாணைகளை கடந்த ஜூன் 3-ம் தேதியிட்ட தமிழக அரசிதழில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம், பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்பது நேரடியாக குறிப்பிடப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில், டெட் தேர்ச்சி தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் ப.சந்திரமோகன் நேற்று தெரிவித்துள்ளதாவது: அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி விதிகள் தொடர்பாக அரசிதழில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு சில அறிவிக்கைகள், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி அவசியமா, இல்லையா என்ற குழப்பத்தை ஆசிரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
டெட் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில், ஆசிரியர் பணி நியமன விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அஞ்சுமன் இஷாத் இ தாலீம் அறக்கட்டளை - மகாராஷ்டிர அரசு இடையிலான வழக்கில், கடந்த மே 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய மறு ஆய்வு தீர்ப்பின்படி, டெட் தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்பது தெளிவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.