

பிரதிநிதித்துவப் படம்
சென்னை: பாலிடெக்னிக் டிப்ளமோ படித்த மாணவர்கள் பழைய அரியர் பாடங்களை எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் அருண் ராய் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமோ படிப்பை முடித்து தேர்வெழுத வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் முடித்து தேர்ச்சி பெறாமல் நிலுவை பாடங்களை (அரியர்ஸ்) வைத்துள்ள மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ள 2015, 2017, 2018, 2019, , 2020, 2021, 2022, 2025-ம் ஆண்டுகளில் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டும் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் செமஸ்டர் தேர்வுகளில் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கைகள் வைத்து வருவதாகவும், அம்மாணவர்களின் நலன் கருதி 2026 அக்டோரபர், 2027 ஏப்ரல் செமஸ்டர் தேர்வுகளின்போது மட்டும் நீண்ட காலமாக அரியர் வைத்துள்ள சுமார் 2 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு மூலம் தேர்வெழுதவும், உரிய தேர்வுக் கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை வெளியிடுமாறும் தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்று பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பை முடித்து பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள சுமார் 2 ஆயிரம் மாணவர்களுக்கு வரும் அக்டோபர் மற்றும் 2027 ஏப்ரல் செமஸ்டர் தேர்வுகளின்போது மட்டும் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
அம்மாணவர்களின் சிறப்பு வாய்ப்புக்காக பதிவுக் கட்டணமாக ரூ.750-ம் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக ரூ.40-ம் விண்ணப்ப கட்டணமாக ரூ.20-ம், ஒரு பாடத்துக்கு தேர்வு கட்டணமாக ரூ.65-ம் நிர்ணயித்து அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.