

சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜன.5) திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் இன்று (ஜன.5) திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறவுள்ளன.
இதையடுத்து பள்ளி திறப்புக்கான வளாக தூய்மைப் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு 3-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க வேண்டும். அதேபோல், திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களையும் மாணவர்களுக்குத் தரவேண்டும்.
மேலும், மாணவர்கள் பின்தங்கிய பாடங்களில் கவனம் செலுத்தி, அவர்களின் தேர்ச்சியை மேம்படுத்த பாட ஆசிரியர்கள் தகுந்த நடவடிக்கை வேண்டும். நடத்தப்படாத பாடங்களை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.