

சென்னை: அரசுப் பள்ளிகளில் நூலகப் பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகளை நடப்பு கல்வியாண்டிலும் அமல்படுத்த வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
பள்ளிக் குழந்தைகளிடம் உரையாடலை தொடங்கவும், இயல்பாக உரையாடவும் வாசிப்புதான் வாசலாக அமையும். வாசிப்பின் வாயிலாக சமூக சிந்தனையை தூண்டவும், உளப்பாடுகளை வெளிக்கொண்டு வரவும் மாபெரும் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
261 புத்தகங்கள்
இதன் அடிப்படையில் வாசிப்பு இயக்கத்துக்கான கதைப் புத்தகங்கள் நுழை, நட, ஓடு, பற என்ற வகையில் முதல்கட்டமாக 53 புத்தகங்கள், 2-ம் கட்டமாக 70, 3-ம் கட்டமாக 81 மற்றும் 4-ம் கட்டமாக 57 என மொத்தம் 261 புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த வாசிப்பு இயக்கப் புத்தகங்களை நடப்பு கல்வியாண்டிலும் (2026-27) பள்ளி நூலகப் பாடவேளைகளில் மாணவர்கள் முழுமையாக வாசித்துப் பயன்பெறும் வகையிலும் மாணவர்களை கதைச் சொல்லிகளாகவும், எழுத்தாளர்களாகவும் உருவாக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.